Sunday, May 07, 2006

சருகின் நடனம்

அது ஒரு அழகான மாலை. காற்றில் ஒரு சிறிய இலை சுருண்டு, சுருண்டு ரம்மியமாக கீழே விழுகின்றது. காற்றில் ஒரு நடனம் போல, அந்த இலையின் அசைவு மிகவும் அழகாக இருந்தது. ... ஒடி வந்த சிறுவன், அந்த சருகை எடுத்து தன் புத்தகத்திற்குள் பத்திரப்படுத்துகிறான். அவனும் என்னைப் போல அந்த காட்சியை பார்த்திருக்கவேண்டும். யோசிக்கிறேன்... உண்மையில் அவன் பத்திரப்படுத்த நினைத்தது சருகையல்ல. சருகின் அசைவை... நாமும் இப்படித்தானே... வாழ்க்கையில் எதையெதையோ சேகரிக்க நினைத்து .... வேறெதையோ சொந்தமாக்கிக் கொண்டு...


பழைய புத்தககடையில் வாங்கிய புத்தகத்தின் உள்ளே இருக்கும் பெயரெழுதிய இரண்டு திரையரங்கு நுழைவு சீட்டுகள், பழைய டைரியில் கண்டெடுத்த ஏதோ ஒரு தினசரி நாள்காட்டியின் ஒரு பக்கம், கல்லூரி கட்டிடத்தின் யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் கரியால் எழுதிய அந்த இரண்டு பெயர்கள்...


எனக்கு தோன்றுவது என்னவென்றால் , உண்மையில் நாம் சேகரித்து வைத்திருக்கும் பல பொருட்களில் எதையோ நாம் தொலைத்து இருக்கிறோம். பத்திரப்படுத்தியது நாம் இழந்துவிட்டோம் என்கிற நினைவை மட்டுமே...

0 Comments:

Post a Comment

<< Home